Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Monday
Sep 06th
Home Articles கொரில்லா (Gorilla)
கொரில்லா (Gorilla) PDF Print E-mail
Monday, 20 April 2009 02:58

கொரில்லா (Gorilla)

 

மனிதனின் செயல்பாடுகள் மற்றும் தோற்றத்தில் அவனைப் போலவே ஒத்த பல பண்புகளைக் கொண்ட கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

 

பலவிதமான சர்சைகளுக்கும், விவாதங்களுக்கும் ஆத்திக மற்றும் நாத்திக மக்களுக்கிடையே மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கிடையேயும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்திய இந்த உயிரினத்தைப் பற்றிய டார்வினின் கருத்து 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகும். இதைப் போன்று அறிவியல் உலகில் புயலைக் கிளப்பிய வேறு ஒரு உயிரினம் எதுவும் இல்லை என்று நம்மால் திட்டவட்டமாக சொல்ல இயலும். இத்தகைய வாலில்லாத குரங்கு வகையைச் சேர்ந்த கொரில்லாக்களைப் பற்றிய விபரங்களையும் விரிவான தகவல்களையும் இவற்றின் மூலம் பரிணாம வளர்ச்சி ஏற்றபட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பதைப் பற்றிய நம்முடைய சொந்த அபிப்ராயங்களையும் பார்ப்போம். இந்த கொரில்லா எந்த விஷயத்தில் மற்றவற்றை விட வேறுபட்டு விளங்குகின்றது என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுகளின் அவசியம் தேவை இல்லை. மனிதனைப் போன்று தோற்றத்தில் இருக்கும் ஒரே விலங்கினம் இத்தகைய கொரில்லாக்கள் என்ற ஒரு விஷயம் நம் தொடரின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.


பொதுவாக அறிவியல் அறிஞர்கள் எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அவற்றின் சில பண்புகளை அடிப்படையாக வைத்து ஒரு பட்டியலின் கீழ் வகைப்படுத்துகின்றனர். அதுபோல் மனிதன் உட்பட 235 பாலூட்டி இனங்களை பிரிமேட் (
Primate) எனும் பிரிவின் கீழ் கொண்டு வருகின்றனர். இவற்றில் முதன்மையான பண்பாக மனிதனைப் போன்று தட்டையான அகன்ற முகமும் நேராகப் பார்க்கக் கூடிய கண் அமைப்பும், மற்ற விலங்குகளைக் காட்டிலும் நன்கு வளைந்து கொடுக்கக் கூடிய வகையில் அமைந்த கை, கால், விரல்கள் அமைப்பையும் கொண்டுள்ளதால் இந்த பிரிவின் கீழ் விஞ்ஞானிகள் கொண்டு வருகின்றனர். இவற்றில் 30 கிராம் எடையுடைய லெமூர்(Mouse Lemur) முதல் அதைப் போன்று ஏறக்குறைய 6000 மடங்கு எடையுடைய கொரில்லாக்கள் வரை அதில் அடக்கம். அதில் மிக அதிக எடையுடைய கொரில்லக்களைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

 


ஆண்டாண்டுக் காலமாக கொரில்லாக்கள் ஆபத்தான பயங்கரமான உயிரினமாகத்தான் மக்கள் மத்தியிலே உருவகப்படுத்தப்பட்டு வந்தன. எந்த விஷயத்தில் ஒரு தெளிவு இல்லையோ அதில் தங்கள் கற்பனைக் குதிரையை தட்டி முடுக்கிவிடுவதென்பது மனித இயல்பாகத்தானே இருந்து வருகிறது.


1933ம் ஆண்டு வெளிவந்த கிங் காங்
(King kong) படம் முதற் கொண்டு 1976ம் ஆண்டு வெளிவந்த கிங் காங் படம் வரை இவை அச்சத்தை எற்படுத்தும் பாத்திரங்களாகத்தான் மக்கள் மத்தியிலே விளம்பரப்படுத்தப்பட்டது. அவற்றின் தோற்றம் அத்தகைய அச்ச எண்ணத்தை தோற்றிவிப்பதாக இருப்பினும் கூட உண்மையில் கொரில்லாக்கள் மிக மிக சாதுவான பிராணிகளாகும். இதைப் பற்றிய மக்களின் கற்பனைகள் உண்மைக்கு மாற்றமாக மடையுடைந்த வெள்ளமாய் பாய்ந்து சென்றதற்குக் காரணம் அவற்றைப் பற்றிய உண்மையான தெளிவு இல்லாமையே.

கொரில்லாக்களை அவை வாழக்கூடிய இயற்கையான சூழலிலேயே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சி (
Field study) சிந்தனை முதன் முதலாக 1960 ஆண்டு வாக்கில்தான் தோன்றியது. முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற் கொணடவர் போஸே தயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார். இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார். இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தவர். இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக் காடுகளில் தன் பாதச் சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985 ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில் கொல்லப்படும் காலம் வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் கொரில்லாக்களைப் பற்றிய ஒரு நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. அவருக்கு பிறகும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கொரில்லாக்கள் பிரிமேட் என வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களில் மிக அதிக அளவு எடையுடைய உயிரினமாகும். கொரில்லாக்களும் சிம்பன்சியும் மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மனிதனை ஒத்த உருவ அமைப்பையும் மற்றும் சில பண்புகளையும் பெற்று விளங்குகின்றன. அவற்றின் உடல் அமைப்பு அவற்றின் இனப் பெருக்க முறை மற்றும் அவை குட்டியை பராமரிக்கும் முறை அவற்றின் கை மற்றும் கால் அமைப்பு ஆகியவற்றை மனிதனுக்கும் இவைகளுக்கும் இடையேயான ஒற்றுமையாகச் சொல்லலாம். இருப்பினும் இவற்றைக் கொண்டு மனிதன் பரிணாமம் பெற்றான் என்ற முடிவுக்கு அதற்குள் எட்டிவிடாதீர்கள். உருவத் தோற்றத்தில் ஒத்து இருக்கின்றன என்பதோடு உங்கள் சிந்தனை செல்வதைச் சற்றே மடை போடுங்கள்.



குடும்பத் தலைவருடன் குடும்ப உறுப்பினர்கள்.


கொரில்லாக்கள் மிக அடர்ந்த தாவர வகைகள் நிறைந்த மலைப் பகுதிகளில் ஒரு சமுதாயமாக இணைந்து வாழக்கூடிய அக்மார்க் காட்டுவாசியாகும். நிலையான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இவற்றின் ஒரு குழுவில் சில எண்ணிக்கையிலிருந்து 50 வரையிலான எண்ணிக்கை வரை கூட ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பில் இணைந்து வாழக்கூடியவை. இருப்பினும் பொதுவாக ஒரு குழுவில் ஒன்று முதல் இரண்டு ஆண் கொரில்லாக்களும்
(Silver back) நான்கு முதல் ஐந்து பெண் கொரில்லாக்களும் மற்றும் அவற்றின் குட்டிகளும் (infant) சேர்ந்தவை ஒரு குடும்பமாக இருக்கும். ஒரு குழவில் மூத்த வகையுடைய ஆண் கொரில்லா குழுவின் தலைமையை வகிக்கும். அது இறப்பெய்யும் வரை எந்த போட்டியோ தேர்தலோ இன்றி தானே ராஜா தானே மந்திரிதான்.

ஆண் கொரில்லாக்கள் பருவ வயதை அடையும் போது அவற்றின் பின்புற முடி சற்றே வெள்ளையாக நிறமாற்றம் அடையும் இந்தத் தருணத்தில் தான் இவை உடல் ரீதியாக இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இதன் பிறகு இந்த காட்டு மைனர் ஒரு ஜோடியை கவர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றான். மேலும் இந்த நாயகனால் கவரப்பட்ட மற்ற குடும்பத்தைச் சேர்ந்த நாயகிகளும் சில இணைந்து விடுவதுண்டு. இதை சில்வர் பேக் (
silver back) என்ற காரணப்பெயரோடு குறிப்பிடுகின்றார்கள். அதே குடும்ப சந்ததியில் வயசுக்கு வராத மற்ற ஆண் கொரில்லாக்கள் பிளாக் பேக் (black back) என்று அழைக்கப்படுகின்றன. ஆண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்களை விட இரு மடங்கு எடையுடையதாகும். நாலைந்து மனைவியை வைத்துக் காலம் தள்ள வேண்டும் என்று சொன்னால் சும்மாவா? தேவையான போது தன் இஷ்ட நாயகியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சக்களத்தி சண்டை உண்டா? என்ற விபரம் கிடைக்கவில்லை.


ஆண் கொரில்லாக்கள் 180 கிலோ எடையும், 1.75 மீட்டர் உயரமும் (சராசரி மனிதனின் உயரம்), பெண் கொரில்லாக்கள் 90 கிலோ எடையுடன் 1.5 மீட்டர் உயரமும், குட்டி பிறக்கும் போது 2 கிலோ எடை வரை இருக்கும். கொரில்லாக்களின் வாழ் நாள் அதிக பட்சமாக 45 வருடங்களாகும்.

 

 

பயப்படாதே கண்ணே நீ விழுந்தால் என் உடலில் மட்டும் அல்ல. என் உள்ளமும் காயப்படும்.


கொரில்லாக்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும் அவை பிரதான தரை வாழ் விலங்கினமாகும். இருப்பினும் அவற்றினால் மரங்கள் ஏறவும், பழ வகைகளைப் பறித்து உண்ணவும், கிளை விட்டு கிளை தொற்றித் தாவி பாய்ந்து செல்லவும் மற்ற வகையான குரங்கு சேட்டைகள் புரியவும் திறன் பெற்றவையாகும். ஆண் கொரில்லாக்களை விட பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகள் அதிகம் மரங்களில் ஏறக்கூடியதாய் இருக்கின்றன. ஏனெனில் பெரும்பாலான தாவர வகைகள் ஆண் கொரில்லாக்களின் அதிகப்படியான எடையைத் தாங்கக் கூடியதாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். இவற்றின் தோலின் நிறம் கருமையாகும். இவற்றின் உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் அறவே முடிகளற்றும் முகம் மற்றும் மார்பில் சிறிதளவிற்கு முடியும் இதைத் தவிர்த்து மற்ற உடலின் மற்ற பகுதியில் அடர்ந்த முடிகளையுடையதாயிருக்கும். இவைகளின் பரந்த உறுதியான மார்பு இவற்றின் பராக்கிரமத்திற்குச் சான்று பகரக்கூடியவை. இவற்றின் கை மற்றும் கால் அமைப்பு மனிதனை ஒத்திருப்பினும் இவை கை மற்றும் கால்கள் நான்கின் மூலம் நடந்து செல்லக் கூடியவையாகும். இவற்றின் கை அதன் கால்களைக் காட்டிலும் 20 சதவிகிதம் வரை நீளமாகும். இவற்றின் கைகள் கால்களின் நீளத்தை விட அதிகமாக இருப்பதனால் உடலின் பெரும்பகுதி எடையை இவற்றின் கைகள் தாங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் பொதுவாக தண்ணீரை விரும்புவதில்லை. அவை உண்ணக்கூடிய இலை தழைகளின் நீர் சத்து பெருமளவில் இவற்றின் தண்ணீர் தேவையைப் பூர்த்தியாக்கி விடுகின்றன. கொரில்லாக்கள் மற்ற வகை வாலில்லாத குரங்குகள் போன்றல்லாது சுத்தமான சைவப் பிராணியாகும்.


தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடி மிக உழன்று என்ற பாரதியின் கவிதையைப் போல கொரில்லாக்கள் தங்கள் வாழ்நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை உண்டு கழிப்பதிலேயே செலவிடுகின்றன. இவற்றின் பிரதான உணவு இலை, தண்டு, பூ, பழம், விதை, வேர் மற்றும் கிழங்கு போன்றவையாகும். இவை தங்கள் உணவிற்காக ஒரு நாளைக்கு சில நூறு மீட்டர்கள் முதல் ஒரு மைல் தூரம் வரை பயணிக்கக் கூடியதாகும். கொரில்லாக்கள் மற்ற வகைகளைப் போன்றல்லாமல் நடத்தல், விளையாடுதல், ஓய்வெடுத்தல் போன்ற குண இயல்புகளைக் கொண்டுள்ளன. எந்த இடத்தில் இருக்கும்போது சூரியன் அஸ்தமனத்தை அடைகின்றதோ அதே இடத்திலேயே இந்த நாடோடிக் கொரில்லாக்கள் தங்கள் குழுவுடன் தங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் ஒவ்வொரு தினமும் இரவில் புதிய தங்கும் கூட்டை அமைத்துக் கொள்கின்றன. இவற்றின் கூடு வளைந்து கொடுக்கக் கூடிய மரக் குச்சிகள், இலை மற்றும் புற்பூண்டுகளைக் கொண்டு தரையிலோ அல்லது மரத்திலோ அமைத்துக் கொள்கின்றன. பொதுவாக ஆண் கொரில்லாக்கள் மரத்தினடியிலும் பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகளும் மரத்தின் மேலும் இரவில் உறங்குகின்றன. இவற்றின் ஒரு குழு 5 முதல் 30 கிலோ மீட்டர் வரையான பரப்பளவை தங்கள் இராஜியத்தின் ஏகபோக எல்லையாகக் கொண்டு உணவு தேவைக்காகவும் தூங்க, நடக்க போன்றவைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. மனிதர்களைத் தவிர்த்து மற்ற குறிப்பிட்டுச் சொல்லும் படியான எதிரிகள் இல்லை என்று சொல்லலாம். மிகச் சொற்பமான சில இடங்களில் சிறுத்தைகளினால் இவை தாக்கப்படுகின்றன. அதையல்லாது மற்ற எதிரிகள் என்று சொல்லும் படியாக எதுவும் இல்லை.

 


பயந்துவிடாதீர்கள்! வெறும் பாவ்லாதான்!!

 

கொரில்லாக்கள் பொதுவாக சண்டைச் சச்சரவுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவதில்லை. நமக்குள் எதுக்கு சண்டை பேசாமல் நீ உன் வேலையைப் பார்! நான் என் வேலையைப் பார்க்கின்றேன்! என்பது போல் உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடிய அளவிளான சண்டையை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்கின்றன. ஒரு குழுவைச் சேர்ந்தவை அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்கின்றன. அதே சமயம் தலைமையை வகிக்கக் கூடிய ஆண் கொரில்லாக்கள் தலைமைக் கேற்ற பண்புடன் இவைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது தங்கள் குடும்பத்தைச் சூழ்ந்து கேடயமாக பாதுகாப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை. மேலும் மற்ற குடும்ப ஆண் கொரில்லாக்களும் பாதுகாப்பில் பின் வாங்குவதில்லை. கொரில்லாக்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை மார்பை இரு கரங்களினாலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கின்றன.


குடும்பத்தைக் கட்டிக் கொண்டு மார் அடிக்கும் பொழப்பாய் போச்சே என்ற சலித்துக் கொண்டு மாரடிக்கக் கூடியவை இல்லை! இவை அடிப்பது, எதிரியை நேருக்கு நேர் அழைத்து அவற்றிற்கு பீதியை கொடுக்கும் மார் தட்டலாகும். மேலும் இவற்றின் பயத்தை உண்டாக்கும் கர்ஜனையும் அவை தங்கள் மார்பை அடித்துத் கொள்ளும் முறையும், வீரிட்டு கத்துவதன் மூலமும் இறுதியாக இவற்றின் வெளிபாடு மிகைத்து விடும்போது நிசப்தமான காடே அல்லோகலப் பட்டுவிடும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதை சகித்து கொள்ள முடியாமலோ அல்லது பயந்தோ அவற்றை நெருங்கக் கூடிய எதிரி ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாக புறமுதுகிட்டு பீதியினால் ஓட்டம் பிடிக்கின்றது. இருப்பினும் இவற்றை சுற்றுலா பயணிகள் எந்த விதமான இடையூரும் இன்றி அன்புடன் உணவு பொருட்களுடன் நெருங்கும் போது அவை அவற்றை மிக அன்புடன் ஏற்றுக் கொள்கின்றன.


கொரில்லாக்கள் தங்களுக்கிடையே 15 வகையான வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் மற்றவற்றுடன் தகவல் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. விலங்குகள் தங்களுக்குள் ஏதோ விதத்தில் பேசி மற்றவற்றிற்கு தகவல்களை தெரிவிக்கின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. இவையும் வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்கின்றன. கொரில்லாக்கள் சைகை மொழியை மிக விரைவில் அறிந்துக் கொள்ளும் திறன் பெற்று விளங்குகின்றன. கோகோ (
koko) என்ற கொரில்லாவிற்கு நன்கு பயிற்சி அளித்ததன் மூலம் 500க்கு மேற்பட்ட சைகைகளை புரிந்துக் கொள்ளும் திறன் இருப்பதாக அறிய வந்துள்ளது. சில கொரில்லாக்களுக்கு முன்பாக கண்ணாடியை வைத்து சோதித்த போது பிரதிபலிப்பது தங்கள் உருவம்தான் என்பதை தெரிந்துக் கொள்ளுகின்றன. இதன் மூலம் இவற்றிற்கு சுயமான சிந்திக்கும் திறன் சிறிது இருப்பது விளங்கிக் கொள்ள முடிந்தது.

 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்


மனிதர்களைப் போன்றே இவற்றிற்கும் இனப்பெருக்கத்திற்கென்று குறிப்பிட்ட ஒரு கால வரையரைக் கிடையாது. வருடத்தின் எந்த நாட்களில் இவை உறவுக் கொள்கின்றன. பெண் கொரில்லாக்களின் மாத விலக்கு சுழற்சி மனித இனத்தைப் போன்றே 28 நாட்களாகும். தன்னுடைய 9 வயதில் பெண் கொரில்லாக்கள் பருவத்தை எட்டி இனப் பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இவற்றின் கர்ப காலம் 8.5 முதல் 9 மாதம் வரையான கால அளவாகும். தன் வாழ்நாளில் 3 முதல் 6 முறை நான்கு வருட இடைவெளியில் குட்டிப் போடுகின்றன. குட்டிகள் பெற்றெடுக்காத மலட்டு கொரில்லாக்களை விட மக்களைப் பெற்ற மகராசிகளுக்கு இவைகளிடையே நல்ல மதிப்பு உண்டு. கொரில்லாக்களின் குட்டிகள் மனிதக் குட்டிகளை விட இருமடங்கு விரைவாக தங்கள் பாரம்பரிய குணாதிசியங்களை அடைகின்றன. மனிதக் குட்டி எழுந்து நிற்கவே வருடத்தை எடுத்துக் கொள்கின்றது. இவற்றின் குட்டிகளோ தங்கள் வழிமுறைகளை விரைவில் கற்றுத் தேர்ச்சியடைகின்றன. பிறந்த குட்டிகள் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தன் தாயை சார்ந்தே வாழுகின்றன. பால் குடித்தும் மழை மற்றும் குளிரிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தாயின் மடியில் தஞ்சம் அடைந்தும் இரவில் தாயின் கூட்டில் அதனுடன் தூங்கியும் காலம் கழிக்கும். தன் தாய் பயணிக்கும் போது அதன் முதுகில் சவாரி செய்த வண்ணம் பயணம் செய்யும். பொதுவாக பெண் கொரில்லாக்கள் பருவமடைந்த பின் பிறந்த வீட்டை விடுத்து புதிய வீட்டில் புகுந்து கொள்கின்றது. அதாவது வேறு குழுவில் சென்று இணைந்து கொள்கின்றது. அல்லது எலி வளையானலும் தனி வளை வேண்டும் என்று நினைக்கின்றனவோ என்னவோ? தெரியவில்லை!


மைனர் ஆண் கொரில்லாக்களுடன் இணைந்து புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்கின்றன. ஆண் கொரில்லாக்கள் பருவமடைந்தவுடன் "என் வழி தனி வழி" என்ற கணக்கில் புதிய காதலியை தேடி வீடு துறந்து காடே கதியாக வேறுக் குடும்பத்தை சேர்ந்த பெண் கொரில்லாக்கள் பின்னால் லோ-லோ என்று அலைய ஆரம்பித்து விடுகின்றது. அல்லது எங்கு காதல் தேடி அலைவது என்ற சோம்பலில் தன் குடும்பத்தில் இருக்கும் பெண் கொரில்லாவை தள்ளிக் கொண்டு செல்லும் முயற்சியிலும் இறங்குவதுண்டு. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் இத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றிற்கு உடம்பில் டின் கட்டும் நிகழ்ச்சிகளுக்கும் அங்கே குறைவு இல்லை. இத்தகைய இந்த சந்தர்ப்பங்களில் இவைகளுக்கிடையே சண்டைகள் நிகழுவதுண்டு. மேலும் சில சமயம் குட்டிகளைக் கொன்றுவிட்டு அதன் தாயை கடத்தி கொண்டு செல்லும் அகராதிப் போக்கிற்கும் அங்கே குறைவில்லை.


காமத்திற்கு அல்லது காதலுக்கு முன்பு எதுவும் துச்சம் என்ற இந்த செயல்போக்கு மனித இனங்களில் அடிக்கடி காதில் விழும் செய்திதானே. எந்த நேரத்தில் அவைகள் குடும்பத்தை விட்டு ஓட இரகசியம் பேசிக் கொள்கின்றன என்பது அவற்றிற்குதான் வெளிச்சம். அரிதாகப் பருவமடைந்த ஆண் கொரில்லாக்கள் தங்கள் குடும்பத்துடனே தங்கிக் கொள்கின்றன. தன் தந்தை இறந்தவுடன் அல்லது வயது முதிர்ந்தவுடன் தந்தை வழி தனயன் வழி எனபது போல் அந்த குடும்பத்திற்கு தலைமைக்கு வருகின்றது. இவை 35 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியனவாக இருப்பினும் 25 சதவிகிதம் குட்டிகள் பிறந்த இரண்டு வருடங்களில் நோய்களினால் இறந்து விடுகின்றன. இவற்றிற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப் போவது யாரோ?

'ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று
பையல் என்ற போது பரிந்தெடுத்து செய்யவிருக் கைப்புறத்திலேயேந்திக்
கனக முலை தந்தாளை..


என்ற பட்டினத்தாரின் வரிகள் இவற்றிற்கு பொருந்தாமல் போய்விடுமா என்ன? அந்த அரவணைப்பைப் பாருங்கள். அதன் முகத்தில் அன்பினைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்கும் என்ற குறளைப் போல் இறைவன் உயிர்களிடத்தில் வைத்த உணர்ச்சி மயமான அன்பு என்னும் பண்பை எங்ஙனம் வார்த்தைகளினால் விளக்குவது. முற்றிலும் சுய சக்தியற்ற தன் சந்ததியை காக்கும் உணர்ச்சி பூர்வமான அந்த பரோபகார சிந்தனையை இவை எங்கிருந்து பரிணாமம் பெற்றன. உதாரணத்திற்கு எல்லா உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்று பரிணாமம் பெற்றன என்று வைத்துக் கொண்டாலும் உடல் ரீதியான மாற்றம் ஏற்படலாமே தவிர இந்த உணர்ச்சி பூர்வமான பண்புகளை எவ்வாறு அவைகள் பெற்றிருக்க இயலும். ஏதோ சில விஷயங்களில் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஒரு ஒழுங்குடன் அமையலாம். ஆனால் எல்லா விஷயங்களிலுமா அவ்வாறு நிகழ முடியும்?. சாத்தியமே இல்லை! இல்லவே இல்லை!


இந்த உலகில் படைப்பினங்கள் மற்றும் உலகத்தின் ஒழுங்குபாடு எல்லா விஷயங்களும் எவ்வாறு ஒரு ஒழுங்குடனும் எந்த ஒரு முரண்பாடின்றியும் அமைய முடியும். இந்த பரிணாமத் தத்துவம் இந்த அளவிற்கு ஒரு மாயை ஏற்படுத்தியதற்கு காரணம் டார்வினை எதிர்த்த கிருஸ்துவ உலகம் அதற்கு ஒரு சரியான பதில் அளிக்காமையே ஆகும். எதிலும் பகுத்துதான் அறிவோம் என்று சொல்லும் டார்வின் வாதிகளுக்கு பதில் அளிக்க ஆயத்தம் ஆகிவிட்டனர் அறிவியல் அறிஞர்கள்.

 

இந்த நூற்றாண்டில் அறிவியல் உலகினை பிரமிப்பின் எல்லைக்கே இட்டுச் செல்லும், இட்டுச் செல்வதென்ன உதைத்தே துரத்தும் ஒரு துறை இருக்கிறது என்று சொன்னால் அது குரோமோசோம்களில் அடங்கியிருக்கும் ஜீன்களைப் பற்றித் மனிதனின் மரபியல் துறையாகும். மனித உடலின் 23 ஜோடி குரோமோசோம்களில் காணப்படும் இவைகள் மனிதப் படைப்பின் மூலமாக இறைவனால் படைக்கப்பட்டதாகும். இந்த சிறிய மரபியல் மூலக்கூறுகளுக்கென்று ஒரு துறை உருவாக்கப்பட்டு (Genetic Engineering) விரிவான முறையில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இந்தத் துறையில் இதுவரை விஞ்ஞானிகளினால் கண்டறியப்பட்ட சொற்பமான தகவல்கள் இவர்களின் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடியதாய் அமையவில்லை. மரபியல் மூலக்கூறுகளான அடினைன், குவானைன், தைமின் மற்றும் சைட்டோசின் ஆகிய இவைகள் அர்த்தமுள்ள வரிசையில் அமைந்திருக்கும் பாங்கு அறிவியலார்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.


இவற்றில் கிட்டதட்ட 5000 கோடி தகவல்கள் பதியப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளார்கள். இந்த ஜீன்களை மனித உடலைக் உருவாக்கும் பொறியிலாருக்கு ஒப்பாக கொள்ளலாம். இவையே ஒரு மனிதனின் உறுப்புகள், நிறம், உயரம், ஆரோக்கியம், மரபியல் பண்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணியாகும். இவற்றில் ஏதேனும் தவறுகள் ஏற்படின் பிறக்கும் பிறப்பு மனித இனமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். இந்தத் துறை ஆராய்ச்சி மனித இனத்தின் மூலம் ஒரு ஆத்மாதான் என்ற முடிவை எட்டிவிட்டது.

மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்சி அடைந்தான் என்ற கூற்றை டார்வின் வைத்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது குரங்குகளின் தோற்றம் மற்றும் அதன் சில செயல்பாடுகள் மனிதனைப் போன்றே இருப்பதுதான் முக்கியமான காரணம் ஆகும். ஆனால் சமீப கால ஆராய்ச்சியின் முடிவுகள் மற்ற உயிரினத்தின் இரத்தத்தை மனித உடலுக்கு ஏற்ற இரத்தமாக மாற்றக் கூடிய சாத்தியம் இருக்கிறதென்றுச் சொன்னால் அது பன்றியின் இரத்தம்தான் என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றார்கள். ஆம் மனித இரத்தத்தோடு நெருங்கிய ஒற்றுமை உடையது பன்றியின் இரத்தமாகும். மேலும் பன்றியின் இதய அமைப்பு மனித இதயத்தை பெருமளவிற்கு ஒத்திருக்கின்றன. எனவே மனிதன் பரிணாமம் அடைந்தான் என்று வைத்துக்கொண்டால் மிக நெருக்கமாக வருவது பன்றிதான் என்று அறிவியலார் சொல்கின்றார்கள். இப்பொழுது சப்தநாடியும் அடங்கிய இவர்கள் என்னச் சொல்லப்போகின்றார்கள். மனித குலத்தின் மூலம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளும் போது அதை படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்கும் நிலை ஏற்படும் என்பதல்லாமல் இவர்கள் மறுப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்கின்றது. ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 30 டிரில்லியன் (1000 பில்லியன்ஸ் = ஒரு டிரில்லியன்) செல்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். இதில் ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் உணவுச்சத்துகள் எந்த விதமான குறைவுமின்றி வினியோகம் செய்யப்படுகின்றன.


ஆனால் இன்று உலகின் 600 கோடி மக்களுக்கும் ஒரே சீராக பட்டினியின்றி மனிதர்களினால் உணவளிக்கப்படுகின்றதா? ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவில் பாலை கடலில் கொட்டுகின்றார்கள். அமெரிக்காவில் கோதுமையை கடலில் கொட்டுகின்றார்கள். ஐரோப்பாவில் உணவு உற்பத்தி அதிகமாகி நிலத்தை உழாமல் தரிசாக போட்டு வைக்க மானியம் வழங்கப்படுகின்றது. மறுபுறம் நிகழும் பட்டினிச் சாவுகளை எதிர் நோக்கி சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, ருவாண்டா, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகள். பசிக்கு மாங்கொட்டையை அரைத்து தின்று உயிர் விடும் மலைவாழ் இந்தியர்கள் ஒருபுறம் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இத்தகைய விஷயங்களில் இவனால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை. சீரான வினியோகம் என்பது இதுவரை இவனைக் கொண்டு சாத்தியமற்றதாய் இருக்கின்றது. ஆனால் இறைவன் படைத்த நம் உள் உறுப்புகளில் எந்தத் தங்கு தடையுமின்றி எந்த முரண்பாடுமின்றி வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உங்களுக்குள்ளேயே நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்ற நித்திய ஜீவனாகிய நம் இறைவனின் வல்லமையை மனிதன் சிந்தனைச் செய்தாலே இறைவனின் அற்புதங்களை கணக்கின்றிக் காண முடியும்.

அறிவியலைப் பற்றி சிறிதளவே அறிந்தவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகிறான். ஆனால் அறிவியலைப் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவனோ, இறை நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்கிறான். என்ற ஒரு அறிஞனின் கூற்று இந்த இடத்தில் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.


உங்கள் அனைவரின் மீளுதலும் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே உங்களை ஆரம்பத்தில் படைத்தான். பின்னர் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கின்றான். (ஏக இறைவனை) மறுப்போறுக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தால் கொதிக்கும் பானமும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 10:04)

 


Comments
Add New Search RSS
christmas gifts  - christmas gifts   |IP:112.111.40.224 |2010-07-08 06:55:07
Everyone knows that we need link:http://www.decorsell.com/Christmas-decor.htm l, link:http://www.decorsell.com/Christmas-ornaments .html, also link:http://www.decorsell.com/Christmas-lights.ht ml when the Christmas co
ming, and we are always wo rried about where to buy link:http://www.decorsell.com, now I find a good  way to solve this proble
ms that is online shopping , you also can have a try.
Anonymous   |IP:120.33.241.224 |2010-08-30 08:13:17
Dear customers, thank you for your support of our company.
Here, there's good n
ews to tell you: The company recently
launched a number of new fashion items!
! Fashionable
and welcome everyone to come buy. If necessary, please
plut: www
.2kuu.com
www .ongoin.com
We need your support and trust!
Write comment
Name:
Email:
 
Title:
 
Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

 
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details